
அறிவியல் என்பது ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்ல உதவக்கூடிய சிந்தனையாகும். அதாவது அறிவியல் சமூக முன்நகர்தலை ஏற்படுத்தி வளர்ச்சி நிலைக்குக் கொண்டு செல்லக்கூடியதாகும். அத்தகைய அறிவியல் மற்றும் தொழில்நுட்பமானது தமிழ் இலக்கியங்களில் பலவிதமான பிரதிபலிப்புகளை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம். நமது தமிழ்மொழி மிகவும் தொன்மை வாழ்ந்த ஒரு மொழியாகும். பன்னெடுங்காலமாகப் பேச்சுவழக்கிலும், இலக்கிய வழக்கிலும் தமிழ்மொழி வழங்கி வருகின்றது. காலந்தோறும் அயல்நாட்டுத் தொடர்புகள், பொருளாதார ஏற்றத்தாழ்வு, மாறிவரும் புதுமைகள் போன்றவற்றின் தாக்கத்தால் பல மாற்றங்கள் எய்தி வந்திருக்கிறது. அதில் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி அபார வளர்ச்சியாகவே கணக்கிடப்படுகிறது. இந்த வளர்ச்சிக்கு அந்தந்த தாய்மொழி வழி சிந்தனைகளே காரணமாக இருக்கின்றன.“ஒரு நாட்டின் கல்வி வளர்ச்சியும், கல்விப் பயனும் அறிவியல் விழிப்புணர்வும், தொழில் நுட்பமும் சிறந்து விளங்க வேண்டுமென்றால் அந்த நாட்டில் வழங்கப்படும் கல்வி அந்த நாட்டு மொழியிலேயே அமைதல் வேண்டும் என்ற கருத்து உலக அளவில் ஒத்துக் கொள்ளப்பட்ட ஒன்று என்பர். இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடி என்பார்கள். எனவேதான் சங்க காலத்தில் தோன்றிய இலக்கியங்களில் அறிவியல் தொழில்நுட்ப கூறுகள் மிகுதியாக இருப்பதை அடையாளங்காணமுடிகிறது. சங்க காலத்தில் இலக்கியங்களில் கூறப்பட்ட அறிவியல் தொழில்நுட்ப கூறுகள் வருங்கால ஆய்வுகளுக்கும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் வித்திட்டதைப் பார்க்க முடிகிறது. இன்னும் எத்தனை ஆண்டுகள் கடந்துச் சென்று தொழில்நுட்பம் வளர்ச்சி பெற்றாலும் அடித்தளம் என்னவோ தமிழ் இலக்கியங்களே. தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டிருக்கும் அறிவியல் தொழில்நுட்பங்களின் பிரதிபலிப்பைஏற்ற சான்றுகளுடன் ஆராய்வதே இவ்வாய்வுக்கட்டுரையின் நோக்கமாகும்.
