
உலக மொழிகளில் பிறந்து சிறந்த மொழிகளில் சிறந்தே பிறந்த மொழியாக தமிழ் மொழி செம்மாந்து திகழ்கின்றது. காரணம் தமிழர்தம் பன்னெடுங்கால வாழ்வியல் முறையில் அமைந்துள்ள பண்பாட்டுச் சிறப்பும், பக்தி உணர்வும், பல்துறை அறிவில் மிளிர்ந்த சிறப்புமே ஆகும். ஒவ்வொரு இலக்கியமும் சமுதாயத்தை பிரதிபலிக்கும் கண்ணாடியாக திகழ்கிறது. இலக்கியம் தான் தோன்றிய சமுதாயத்தின் பண்பாட்டையும் நாகரீகத்தையும் பொருளாதாரத்தையும் அக்கால மக்களின் அறிவையும் பழக்க வழக்கங்களையும் சிறப்பாக எடுத்துரைக்கின்றது. இந்த அடிப்படையில் தான் நம் பக்தி இலக்கியங்களும் அறிவியல் பூர்வமாக மிளிர்கின்றது. இருபதாம் நூற்றாண்டை அறிவியல் யுகம் என்றே கூறலாம். உலகம் அறிவியல் தொழில்நுட்பத்தில் முன்னேறி எல்லாம் இயந்திர மயமாக மாறிக்கொண்டு வருகிறது. நட்ப்பதற்கும், ஒரு நிமிடம் உட்காருவதற்கும் கூட நேரமில்லை என்னும் நிலையில் அதிவேகமாய் இயங்கிக் கொண்டிருக்கிறோம். இக்கால சூழல் தானே இவ்வாறு இருக்கிறது என்று நாம் எண்ணினால்.... நம் முன்னோர் காலத்திலேயே அறிவியல் கண்டுபிடிப்புகளும் சாதனைகளும் கணக்கில் அடங்காது அறிவியல் வளர்ச்சி பெற்று விளங்கும் பக்தி இலக்கியங்களையும் தமிழ் மொழியில் காணலாம்.
